தமிழரின் பரவலும் மாறாம்புலத்தின் தோற்றமும் – நூல் அறிமுகம்

Published on Author Noolaham Foundation

தமிழரின் பரவலும் மாறாம்புலத்தின் தோற்றமும்

நூல் அறிமுகம்

பூ. நகுலன்

ரவல், என்கின்ற விடயங்களைத் தாங்கியதாக முதலாம் பகுதி அமைந்துள்ளது. தமிழர்கள் யாவரும் தான் சார்ந்த தன்னைச் சூழ நிகழ்ந்த விடயங்களையும் தன் அனுபவத்தின் பெறுமதியையும் உணர்ந்து ‘தமிழரின் பரவலும் மாறாம்புலத்தின் தோற்றமும்’ என்ற நூலை அல்வாயைச் சேர்ந்த சி. கணேசமூர்த்தி எழுதியுள்ளார்.

வரலாறு சமய ஆய்வு என்பவற்றை ஆய்வுப்பொருளாகக் கொண்டதாக இந்நூல் அமைகின்றது. 2010 மார்கழியில் முதலாவது பதிப்பை இந்நூல் கண்டுள்ளது. இந்நூலின் உள்ளடக்கம் இரண்டு பகுதிகளை கொண்டதாக விளங்குகின்றது. பகுதி ஒன்று வரலாறு என்ற பிரிவாக அமைந்துள்ளது. பகுதி இரண்டு ஆக்கங்கள் கட்டுரைகள் என்ற பிரிவாக அமைந்துள்ளது.

இறந்தகால நிகழ்வுகளை எதிர்கால சந்ததியும் அறிந்து கொள்ளும் நோக்கில் நிகழ்காலத்தில் செய்யப்படும் ஒர் ஆவணம் அல்லது ஆக்கம் வரலாறு எனலாம். ஒரு இனம் தன் இருப்பினை நிலை நிறுத்திக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது இயல்பானது. அத்தகைய முயற்சிகளில் ஒன்றாகவே வரலாறும் அமைகிறது. கிடைக்கத்தக்க ஆதாரங்களை சரியாகப் பயன்படுத்தி இவ்வரலாறு எழுதப்படுகின்றபோது வரலாற்றை எழுதுகின்ற ஆசிரியர் பலராலும் மதிக்கப்படுவது இயல்பானதாகும். மதிக்கப்பட வேண்டும் என்கின்ற உந்துதலும் வரலாற்றாசிரியரிடம் இயல்பாகக் குடிகொண்டு விடுவதும் உண்டு.

இத்தகையதொரு வரலாற்றுப் பின்புலத்தில் தமிழரின் பரவலை ஆசிரியர் எடுத்துரைக்கின்றார். மனித இனத்தின் தோற்றம் பரவல், தமிழரின் தோற்றம் பரவல், ஈழத்தமிழர் வரலாறு பஅறிந்திருக்க வேண்டிய செய்திகளை இவை கொண்டிருக்கின்றன. இத்தகைய செய்திகள் கட்டுக்கதைகளாக அமையவில்லை என்பதை சி. கணேசமூர்த்தி முகவுரையில் குறிப்பிடுகிறார்.. வரலாற்று நூல்களில் இருந்து ஆதாரங்களைத் திரட்டியிருக்கின்றார்.

இலங்கைத் தமிழரது அதிகார மீட்புப் போராட்டம் வெற்றிபெறாமல் நீண்டு போனதிற்குக் காரணமான விடயத்தை தனது கருத்தாக கணேசமூர்த்தி குறிப்பிடுகிறார். கல்வி, ஆளுமை, தன்னம்பிக்கை முதலியவற்றை கொண்டு அரசியல் நடத்திய தலைவர்கள் சுயநலத்தை அனுபவித்தவர்களாகவே இருந்தனர். இன்றுவரை ஒரு தமிழ்த்தலைவர் கூட சமூக பலத்தைக் கட்டியெழுப்பவில்லை. தமிழர்கள் தமக்கிடையே சமூக பலத்தைக் கட்டியெழுப்பினால் தமிழர்களுக்கான சுதந்திரம் மிகவும் எளிதாகக் கிடைக்கும். என்கின்ற ஆதங்கத்தினை ஆசிரியர் இக்கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

முதலாம் பகுதியின் தொடர்ச்சியாக மாறாம்புலம் எங்கள் ஊர், மாறாம்புலம் மாணிக்கப் பிள்ளையார் வரலாறு, எமது சமூக அரசியல் தொடர்பான பதிவுகள்,  எமது ஊர் முன்னோர்கள், என்கின்ற விடயங்கள் காணப்படுகின்றன. மாறாம்புலம் பிள்ளையார் கோயிலின் வரலாறு முழுமையுமாக இப்பகுதியில் விபரிக்கப்படுகின்றது. பண்டைய காலங்களில் தல வரலாறு கூறும் புராணங்கள் எமது தமிழ்மொழியில் எழுந்திருக்கின்றன. இத்தகைய பின்புலத்தில் மாறாம்புலம் பிள்ளையார் வரலாறும் ஆசிரியரால் எழுதப்பட்டிருக்கின்றது. மாறாம்புலம் சார்ந்த விடயங்களைக் கூறியிருக்கின்ற அதேவேளை மாறாம்புலத்தில் தனது பணி எவ்வாறு அமைந்தது என்பதை அரசியல் தொடர்பான பதிவுகள் என்ற பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நூலின் உள்ளடக்கமாக அமையும் இரண்டாம் பகுதியில் திருக்குறளின் பொருட்பால் பகுதியை மையமாகக் கொண்டு தனது அனுபவங்களை முன்னிறுத்தி தற்கால உலகில் பொருளின் தேவையை உணர்ந்து ஒரு கட்டுரையைத் தந்திருக்கின்றனார். ‘வள்ளுவர் கண்ணோட்டத்தில் பொருளும் பொளுள்சேர் வழியும் ஆய்வு விளக்கமும் என்பதாக இக்கட்டுரை அமைந்துள்ளது, வள்ளுவர் குறள்களையும் சான்றாகத் தந்து பொருள் தொடர்பான தேடலை வலியுறுத்தும் கருத்துக்களையும் குறிப்பிட்டுள்ளார். சிறுசிறு உபதலைப்புக்களுடன் பொருட்பால் அதிகார குறட்பாக்கள் இலகுவான மொழி நடையில் எடுத்தாளப்பட்டுள்ளது.

ஆலயம் அதன் முக்கியத்துவம் தொடர்பாக அமைந்த இன்னொரு கட்டுரையில் ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழ கோயிலைக் காண்க’ என்பது அமைந்துள்ளது, ஆசிரியரின் சைவ அனுபவத்தை விளக்குகின்ற கட்டுரையாக இது அமைந்துள்ளது. சமுதாயத்தின் நிலைக்களனாக விளங்கும் ஆலயத்தை பேணிக் காக்கும் கடனை வலியுறுத்துவதாகவும் இக்கட்டுரை காணப்படுகின்றது.

மாறாம்புலம் மாணிக்க விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் விநாயகனின் மகிமையை கூறுவதாக அமைகின்ற கட்டுரை ஒன்று காணப்படுகின்றது. பரம்பரை பரம்பரையாக கூறப்பட்டுவரும் கருத்துக்கள் காற்றோடு காற்றாக செல்லாது அடியவர் மனதில் என்றும் நிலைத்திருக்க வேண்டியவை என உணர்ந்து விநாயகர் தொடர்பான வழிவழியாக வந்த கருத்துக்களை இக்கட்டுரையில் ஆசிரியர் தொகுத்துத் தருகின்றார்.

தேர்த்திருவிழா என்னும் கட்டுரை ஆலயத்தில் நடைபெறும் தேர்த்திருவிழாவை முன்னிறுத்துவதாக அமைகின்றது. தேர்த்திருவிழாவின் உள்ளாந்த கருத்துக்களை அலசுவதாகவும் தத்துவத்தை விளக்குவதாகவும் அக்கட்டுரை உள்ளது.

சைவம் ஒரு வாழ்க்கை நெறி என்கின்ற கட்டுரை வாழ்வாங்கு வாழ வழிகாட்டும் சைவ நொறியின் சிறப்புக்களை சைவப் பெரியவர்களின் தவயோகிகளின் மேற்கோளுடன் எடுத்துரைக்கின்றது.

மாறாம்புலம் பிள்ளையாரை வேண்டிப் பாடிய பாடல்களையும் ஆசிரியர் இந்நூலில் இணைத்துள்ளார். ஆசிரியரின் கவிதை அனுபவங்களையும் இங்கு காணலாம்.

இறைவன் துணையிருந்தால் அனைத்தும் வெற்றியாக அமையும் என்பதையும் அன்பு வழியில் நாம் அனைவரும் வாழவேண்டும் என்பதையும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். அன்பே சிவமாய் அமர்ந்திருக்கும் தன்மையை ஒரு கட்டுரையில் ஆசிரியர் தருகின்றார்.

இந்நூல் எழுதுவதற்கு துணைநின்ற ஆதாரங்களை இறுதியில் தந்துள்ளார்.

மிக அழகாகவும் எளிமையாகவும் அமைந்த இந்நூல்: ஊர்வரலாறுகள் குறித்தும் தமிழர் வரலாறு குறித்தும் தேடும்போதும் வாசகர்களுக்கு அடிப்படையான சில வழிகாட்டல்களை இந்நூல் வழங்கும் என்பது என்பது திண்ணம்.