2025, மே மாதம் 05 ஆம் திகதி யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்திற்கு, கனடாவிலிருந்து சுகந்தி மார்க்கண்டு அவர்கள் வருகை தந்திருந்தார்.
நூலக வலைத்தளத்தையும், அதன் செயல்பாடுகளைப் பற்றிய அடிப்படை அறிவைய ஏற்கனவே பெற்றிருந்த இவர், நூலக நிறுவனத்தின் செயற்பாடுகள், ஆவணப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூக அடிப்படையிலான ஆவணப்படுத்தல் முயற்சிகளை நேரடியாக அறிந்துகொள்வதற்காக வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் நிறுவனத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அரிய ஆவணங்களை பார்வையிட்டதுடன், ஓலைச்சுவடிகளை ஆவணப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பாக கூடுதல் தகவல்கள் இவரால் கேட்டறியப்பட்டன. இதனையடுத்து, ஓலைச்சுவடிகளை சேகரிக்கும், சுத்தப்படுத்தும், எண்ணிம வடிவத்திற்கு மாற்றும் மற்றும் நீடித்த பாதுகாப்பை உறுதிப்படுத்தும் செய்முறைகள் குறித்து விரிவான மற்றும் தெளிவான விளக்கம் வழங்கப்பட்டது. மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஓலைச்சுவடிகள் உள்ளதாக கருதப்படும் இடங்களை அடையாளம் காட்டினார். இந்த தகவல்கள் எதிர்கால ஆவணப்படுத்தல் பணிக்குப் பயனளிக்கும் வகையில் பதிவுசெய்யப்பட்டன.
அதன் பின்னர், நூலகத்தின் ஏனைய துறைகளையும் நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது, ஒவ்வொரு துறையின் பொறுப்பாளர்களும் தங்களது துறையில் மேற்கொள்ளப்படும் முக்கிய செயற்பாடுகள் மற்றும் தற்போதைய தேவைகள் குறித்து விரிவான விளக்கங்களை வழங்கினார்கள்.6
பின்னர், நூலகத்தால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்றிட்டங்கள், நிறுவனத்தின் செயல்பாட்டு சார்ந்து காணப்படக்கூடிய முக்கிய தேவைகள் மற்றும் நடைமுறையில் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து பிரதம நிறைவேற்று அலுவலர் விரிவான விளக்கத்தை வழங்கினார்.
இவருடனான சந்திப்பில் நூலக பிரதம நிறைவேற்று அலுவலர் மற்றும் நிறுவனத்தின் ஏனைய பணியாளர்களும் இணைந்து கொண்டனர்.