05 செப்டம்பர் 2024, வியாழக்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு, 2024ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானியா செப்டர் ஊடாக நூலகத்தின் செயல்பாட்டு சார்ந்து பங்களிப்பு செய்து வரும் கனகலிங்கம் மோகனகுமார் அவரது மனைவி பிரேமதர்ஷினி கனகலிங்கம் மற்றும் அவரோடு யாழ்ப்பாணத்திலிருந்து வைஷ்ணவி ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
இவர்கள் நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன் ஒவ்வொரு துறை சார்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்றிட்டங்கள் மற்றும் அவை சார் அடைவுகள் என்பன தொடர்பிலும் கலந்துரையாடினார்.
“ஈழத்து ஓலைச்சுவடிகள் நூலகம்” செயற்றிட்டம் தொடர்பில் அவற்றை எண்ணிமப்படுத்தல், பாதுகாத்தல், வாசிப்பு முறைகள் சார்ந்து அதிகளவில் கேட்டறிந்து கொண்டனர். மேலும் நூலகத்தில் அன்பளிப்பாக கிடைக்கப்பெற்ற ஓலைச்சுவடிகளையும் நேரடியாகப் பார்வையிட்டனர்.
அத்துடன், எண்ணிமப் பாதுகாப்பு மற்றும் செயன்முறை துறைசார்ந்து எண்ணிமப்படுத்தல் முறைகள், எண்ணிமமாக்க கருவிகள் தொடர்பிலும், எண்ணிம நூலக மற்றும் ஆவணக துறை சார்ந்து நூலகத்தின் எண்ணிம நூலகச் செயற்பாடுகள் தொடர்பிலும் இவர்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது.

மேலும், நிறுவனத்தின் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு துறை யில் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் குறித்தும் இவர்கள் அறிந்து கொண்டதுடன், நிறுவனத்தின் ஆவணமாக்கம் சார்ந்து பழமையான அறிவினை பெற்றுக்கொள்ள வாய்ப்பாக அமைந்ததாக தங்களது பின்னூட்டல்களையும் தெரிவித்திருந்தனர்.
இவர்களுடனான சந்திப்பில் நிறுவனத்தின் துறைசார் தலைவர்களும் ஏனைய பணியாளர்களும் இணைந்து கொண்டனர்.






